மகாராஷ்டிரா மாநிலத்தில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததால் ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி குடியரசு தலைவர் ஆட்சிக்குப் பரிந்துரை செய்தார்.
குடியரசு தலைவர் ஆட்சி நடைபெற்று வந்த நிலையில் நவம்பர் -25 அன்று அதிகாலை
5.17 மணிக்கு குடியரசு தலைவர் ஆட்சி விலக்கப்பட்டு காலை 8 மணிக்கு அவசரமாக
தேவேந்திர பட்னாவிஸ் (பாஜக) முதலமைச்சராகவும், அஜித் பவார் (தேசியவாத காங்கி
ரஸ்) துணை முதல்வராகவும் பதவி ஏற்றார்கள். இந்நிகழ்வு ஜனநாயகப் படுகொலை
என காங்கிரஸ் - சிவசேனை - தேசியவாத காங்கிரஸ் வீதிக்கு வந்தன. THE
TELEGRAPH என்கிற பத்திரிகை WE THE IDIOTS என தலைப்புச் செய்தியுடன் இந்திய ஜனாதிபதியை ரப்பர் ஸ்டாம்ப் என விமர்சனம் செய்தது.
மகாராஷ்டிரா மாநில பிரச்சனையைப் பொறுத்தவரைக்கும் WE THE IDIOTS -
நாம் முட்டாள்களே. சரி, முட்டாள் என்பதன் வேர்ச்சொல் என்ன?
2018 ஆம் ஆண்டின் இறுதியில் கூகுள் தேடு பொறியில் IDIOT எனத் தேடினால்
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பெயர் வர அவ்வாண்டின் அதிக நபரால் தேடப்பட்ட சொல்லானது. முட்டாள் ஒரு தமிழ்ச்சொல். சிலையை அல்லது இராணியைப் பல்லக்கில் வைத்துத் தூக்கி வருகிறவர்கள்,பல்லக்கை கீழே இறக்காமல் இளைப்பாறுவதற்காக இருபுறமும் ஒரு மரத்தால் முட்டுக் கொடுப்பார்கள். அவர்களுக்கு அந்த ஒரு வேலையைத் தவிர வேறு வேலை தெரியாது. இவர்கள் முட்டு + ஆள் - முட்டாள் என்பதாக ஒரு விளக்கம் உண்டு.
குட்டை (குட்ட) என்றால் குறைந்த உயரம் என்று பொருள். பல்லக்கை மிகக் குறைந்த உயரத்திற்கு இறக்குகையில் முட்டுக் கொடுக்கும் ஆள் குனிந்தே முட்டுக் கொடுக்க வேண்டும். இதிலிருந்து பிறந்ததே , ‘குட்டக் குட்டக் குனிபவன் முட்டாள்’ என்கிற பழமொழி. இங்கு குட்ட என்பது தலையில் கொட்டுதல் அல்ல.
முட்டு - முட்டன் - மூடன் ; முட்டு - முட்டி - மட்டி ;முட்டு - மொட்டை - மட்டை - மூடன் ;
முண்டு - மடமை ; முண்டம் - அறிவில்லாதவன்; மொண்ணை - கூரின்மை ; மழுக்கு -
மக்கு - மதியற்றவன்,... யாவும் முட்டு என்கிற சொல்லுடன் தொடர்புடையவை.
பரமார்த்த குரு கதையில் ஒரு குருவுக்கு ஐந்து சீடர்கள் இருந்தார்கள். அவர்கள்
மட்டி, மடையன், முட்டாள், மூடன், மண்டு.
மடையன் என்பதற்கு சமையற்காரன் என்றொரு பொருளுண்டு. கோவிலில் பிரசாதம் சமைக்கும் இடம் மடைப்பள்ளி. இச்சொல்லின் திரிபு மடவன்.
மடவன் என்கிற சொல் மடமை எனும் வேர்ச்சொல்லிருந்து கிளைத்தது. இத்துடன்
தொடர்புடைய வேறு சொற்கள்: மடத்தி, மடந்தை, மடத்தனம். மடமை .
‘மடவ மன்ற தடவுநிலைக் கொன்றை’ என குறுந்தொகையில் கோவர்த்தனார் பாடியுள்ளார். அதாவது, கொன்றை மரங்கள் மடமை உடையன.
‘மடவ, வாழி! மஞ்ஞை மாயினம்’ (மயில் கூட்டங்கள் அறியாமை வாய்ந்தவை) என்கிறது இடைக்காடனாரின் குறுந்தொகை பாடல்.
மடவன் , மடமை, முற்று, முற்றும், முற்றன் ஆகிய சொற்களுடன் தொடர்புடைய சொல் ‘முட்டாள்’.
முற்றன் -முழுமையானவன் (பூர்ணன்). இச்சொல்லை தேவாரம்,’முற்றிலாதானை முற்றனே யென்று மொழியினும்’ எனப் பாடியுள்ளது.
முற்று - முற்றன் = முழுநிறைவானவன்
முற்றும் × முற்றாமை
முற்றாமை - முடிவு பெறாமை (ஏலாமை)
முற்று + ஆ - முற்றா
முற்றவை - அறிவால் முதிர்ந்தோர் கூடிய அவை. Assembly of wise men.
‘கற்றோர் மொய்த்த முற்றவை நடுவண்’ எனப் பெருங்கதை உஞ்சைக்காண்டம் பாடியுள்ளது.
முற்றறிவு - முழுதுணரும் அறிவு; Omniscience;
முற்றறிவன் - எல்லாம் அறிந்தவன்.
முற்று + ஆள் = முழுவதும் ஆள். இதற்கு முழுமகன் என்றொரு பொருளுண்டு. முழுமகன் - அறிவிலி . (திவாகர நிகண்டு).
‘படிக்காத பேதையர்களுக்கு நண்பனாக இருத்தல், கோபம் கொண்ட மனைவியைக்
கோலால் அடித்தல், சிறுமையான குணம் உடையவர்களை வீட்டுக்குள் அழைத்துச் செல்லுதல் ஆகிய இம்மூன்றும் முட்டாளின் காரியங்களாகும்’ என்கிறது திரிகடுகம். இதன் உரையாசிரியர் ஞா.மாணிக்கவாசகன் முட்டாள் என்கிற சொல் முற்றாள் என்கிற சொல்லிருந்து திரிந்தது என்கிறார்.
அதாவது முற்றாள் என்பதற்கு அறிவுக்கே இடமில்லாமல் உடல் முழுவதும் வெற்று ஆளாகவே இருப்பவன் என்று பொருள்.